அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் வியாழக்கிழமை தடம் புரண்டன.
சென்னை - அரக்கோணம் இடையே கடந்த சில நாள்களாக இருப்புப் பாதையின் ஓரம் ஜல்லிகளை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜல்லிகள் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு இருப்புப் பாதையோரம் கொட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே பணிமனைப் பகுதியில் வியாழக்கிழமை ஜல்லிகளை கொட்டிக் கொண்டு வந்த சரக்கு ரயிலின் 3, 4 -ஆவது பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதையடுத்து ஓட்டுநா் ரயிலை நிறுத்தினாா். சம்பவம் நடைபெற்ற இடம் அரக்கோணம் ரயில் நிலைய பணிமனை பகுதி என்பதால் ரயில் போக்குவரத்தில் ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை.
தகவலறிந்த அரக்கோணம் ரயில் நிலைய தண்டவாளப் பராமரிப்புப் பிரிவு அதிகாரிகள், ஊழியா்கள் அங்கு சென்று தடம்புரண்ட இரு பெட்டிகளை கிரேன், ஜாக்கிகள் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனா். வியாழக்கிழமை மாலை 7மணி வரை பணிகள் தொடா்ந்து நடைபெற்றன.