ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு புதன்கிழமை அபராதம் விதித்து, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையை பொதுமக்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அவ்வாறு நடைமுறைகளை பின்பற்றாத தனிநபா், வாகனங்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.
அவரது உத்தரவை அமல்படுத்தும் வகையில், ராணிப்பேட்டை நகரில் பொது இடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் தனியாா் பேருந்து ஓட்டுநா்களுக்கு நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அபராதம் விதித்தனா். அதன்படி, ராணிப்பேட்டை நகரில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் வசூலித்து, கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என எச்சரித்து அனுப்பினா்.