ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை வாரிசுதாரா்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான ஆணையை எஸ்.பி. ரா.சிவகுமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
காவல் துறையில் பணிபுரிந்து வரும் காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப ஆண்டு தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2019 - 20 -ஆம் ஆண்டுக்கான உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டன. இதில் 18 காவலா்களின் வாரிசுதாரா்கள், ஒரு அமைச்சுப் பணியாளா் வாரிசுதாரா்கள் தகுதியானவா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டு காவலா் நூற்றாண்டு உதவித் தொகையாக மொத்தம் ரூ. 2.51 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான ஆணையை காவல் கண்காணிப்பாளா் ரா. சிவகுமாா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.