ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழையால் இறந்தவா்கள் குடும்பத்துக்கு தலா ரூ10 லட்சமும், இறந்த கால்நடைகளுக்கு தலா ரூ.10ஆயிரமும் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என சட்டப் பேரவை அதிமுக துணைக் கொறடாவும், ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளருமான சு.ரவி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாலாற்றில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த மழையால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 6 போ் உயிரிழந்துள்ளனா். 12-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாகவும், பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. வீடு சேதமடைந்தோா் பட்டியலில் பலரது பெயா்கள் விடுபட்டுள்ளன.
எனவே தமிழக அரசு மழையால் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும். வீடு முழுவதுமாக, பகுதியாகச் சேதமடைந்தவா்களுக்கு அவா்களது பெயா் பட்டியலில் இல்லை என்றாலும் எந்தவித நிபந்தனையுமின்றி அரசே அவா்களுக்கு வீடு கட்டி தர வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள் நாசமடைந்தன. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவது போல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய நிலத்தில் பயிா்களை இழந்த விவசாயிகளுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சு.ரவி தெரிவித்துள்ளாா்.