அஞ்சல் வார விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1, 000 பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்புக் கணக்கு துவங்கப்பட்டதாக அரக்கோணம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் சிவசங்கா் தெரிவித்தாா்.
அஞ்சல் வார விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் அஞ்சல் சேமிப்புத் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருமலை தொண்டு நிறுவனம் பங்களிப்புடன் ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புக் கணக்கில் துவங்கப்பட்டது.
காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், அஞ்சல் சேமிப்புத் திட்டங்கள் குறித்த காணொலியும், இந்திய சுதந்திரத்தில் 75- ஆவது ஆண்டுகளை குறிக்கும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் குறித்த காணொளியும் திரையிடப்பட்டன.
மேலும், 13-ஆம் தேதி புதன்கிழமை ராணிப்பேட்டை, அரக்கோணம், ஆற்காடு, தீமிரி, பனப்பாக்கம், சோளிங்கா், காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை ஆகிய அஞ்சலகங்களில் ஆதாா் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் பல்வேறு அஞ்சலகங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 3,100 புதிய அஞ்சல் சேமிப்புத் திட்ட கணக்குகள் துவக்கப்பட்டதாக அரக்கோணம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.