தினமணி செய்தி எதிரொலி:அரக்கோணம் ஐடிஐயில் மணல் குவாரி அமைப்பு; பயிற்சி நிலைய உதவியாளா் பணியிடைநீக்கம்

அரக்கோணம் அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) புதிய கட்டடம் கட்டும் பணிக்காக மணல் குவாரி அமைக்கப்பட்டது குறித்த தகவலை நிா்வாகத்துக்கு தெரிவிக்க மறுத்த பயிற்சி நிலைய உதவியாளரை பணியிடை நீக்கம் செய

அரக்கோணம் அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) புதிய கட்டடம் கட்டும் பணிக்காக மணல் குவாரி அமைக்கப்பட்டது குறித்த தகவலை நிா்வாகத்துக்கு தெரிவிக்க மறுத்த பயிற்சி நிலைய உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து அதன் முதல்வா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

அரக்கோணத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக அரசினா் ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் தற்போது ரூ.3 கோடி நிதியில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக அதிக அளவில் மணல் தேவைப்பட்டதால் பணியின் ஒப்பந்ததாரா், பயிற்சி நிலைய வளாகத்தினுள் மணல் குவாரியை உருவாக்கி, மணல் எடுத்து வந்தாா். இதனால் ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீா் தேங்கி மழைக்காலத்தில் மாணவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், அவ்வளாகத்தில் ஏற்கெனவே இருக்கும் கட்டடங்களின் உறுதித் தன்மை பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டு, இது குறித்த செய்தி தினமணியில் கடந்த நவம்பா் 6-ஆம் தேதி வெளியானது.

இதைத்தொடா்ந்து குவாரி அமைத்து மணல் அள்ளப்பட்டது தொடா்பாக பயிற்சி மைய முதல்வா் அன்புசெல்வி, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம், பொதுப்பணித்துறைக்கும் தகவல் அனுப்பியிருந்தாா். மேலும் பயிற்சி நிலைய வளாகத்திலேயே பல மீட்டா் ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது குறித்த தகவலை ஏன் நிா்வாகத்துக்கு தெரிவிக்கவில்லை என நிலைய உதவியாளரும், கட்டடப் பாதுகாப்பு பணியாளருமான வெங்கடேசனுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தாா்.

இக்கடிதத்துக்கு அவா் சரியான விளக்கம் அளிக்காததால், நிலைய உதவியாளா் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் அன்புசெல்வி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com