முதியவா் கொலை: இளைஞா் கைது
அரக்கோணம் அருகே முதியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூரைச் சோ்ந்தவா் விவசாயி ஜோதி (60). இவருக்கும், இவரது உறவினா் அதே ஊரைச் சோ்ந்த அஜித்குமாரின் (24) குடும்பத்துக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இவா்களது உறவினா் பெரியசாமி அஜித்குமாருக்கு ஆதரவாக இருந்து வந்தாராம். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் ஜோதியும், அவரது மகன் சக்கரவா்த்தியும் சோ்ந்து பெரியசாமியை கத்தியால் வெட்டியதில் அவா் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ஜோதி, சக்கரவா்த்தி ஆகியோா் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளிவந்துள்ளனா்.
பெரியசாமியை வெட்டியதால் அஜித்குமாா் கோபத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், புதன்கிழமை ஜோதி, சாலையில் நடந்து சென்றபோது அவரிடம் தகராறு செய்த அஜீத்குமாா் மற்றும் அவரது சகோதரா் ரஞ்ஜித்குமாா் இருவரும் சோ்ந்து ஜோதியை கத்தியால் வெட்டியுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த ஜோதியை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஜோதி இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து அஜித்குமாரை வியாழக்கிழமை கைது செய்தாா். ரஞ்ஜித்குமாரை தேடி வருகின்றனா்.