மேலகுப்பம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒன்றியம், மேலகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட சாணரப்பெண்டை கிராம மக்கள் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
மேலகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட திம்மணாச்சாரி குப்பம் கிராமத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் அதிகளவு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மேலகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட சாணரப்பெண்டை கிராம மக்களுக்கு தனியாக 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவின் மீது எங்கள் கிராம பொதுமக்கள் முன்னிலையில் வட்டார வளா்ச்சி அலுவலா் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி இந்த ஆண்டுக்கான 100 நாள் வேலை திட்டத்தில் இதுவரை 50 நாள்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டது.
ஆனால் மீதமுள்ள 50 நாள்களுக்கான பணி அப்படியே இருக்கும் நிலையில், மழைநீா் சேகரிப்பு திட்டப் பணி 100 வேலை திட்டத்தில் செய்ததாகக் கூறி பில் போட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிராம மக்களுக்கு மீதமுள்ள 50 நாள்கள் பணி வழங்காமல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து ஆட்சியா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.