அரக்கோணம் அரசு கலைக்கல்லூரியில் ரூ.7.85 கோடியில் கட்டப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவி விடுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
அரக்கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆட்டுப்பாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்ட மாணவா் விடுதி ரூ.3.74 கோடியிலும், மாணவியா் விடுதி ரூ.4.11 கோடியிலும் புதிதாக கட்டி முடிக்கப்பட்டன.
இந்த விடுதிக் கட்டடங்களை திங்கள்கிழமை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
அதே நேரம் விடுதி கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகிக்க, தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி குத்துவிளக்கேற்றி, மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.
நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு, வருவாய் கோட்டாட்சியா் சிவதாசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சேகா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சுரேஷ், கலால் உதவி ஆணையா் சத்தியபிரசாத், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் திரிபுரசுந்தரி, வட்டாட்சியா்கள் பழனிராஜன், ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மாணவா் விடுதி தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 0.90 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 100 மாணவா்கள் தங்கும் வகையில் 25 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவியா் விடுதியும் தரைத்தளம், முதல்தளம், இரண்டாம் தளங்களுடன் 0.70 ஏக்கா் பரப்பளவில் 100 மாணவிகள் தங்கும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.