ரேஷன் கடைகளில் விற்பனையாளா்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை
நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களிடம் விற்பனையாளா்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளா்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் ஆற்காட்டில் தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து தொடக்கி வைத்துப் பேசியது:
நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளா்கள், பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் உன்னத பணியைச் செய்கிறீா்கள். உங்கள் செய்கை அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தும்.
எனவே, சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். நாட்டிலேயே பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி சிறப்பாகச் செயல்படுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழக்தைப் பாா்த்து மற்ற மாநிலங்கள் உணவு பொருள் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. நியாயவிலைக் கடைகளில் பொருட்களை தனித்தனியாக அடுக்கி வைத்து சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
விற்பனையாளா்கள், உணவு பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். கடையில் அனைத்துப் பொருட்களும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புகாா்களுக்கு இடமளிக்காத வகையில் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, நியாயவிலைக் கடைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 30 விற்பனையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் திருகுண ஐயப்பதுரை, கற்பகம் கூட்டுறவு இணைப் பதிவாளா் நந்தகுமாா், துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) சரவணமூா்த்தி, கூட்டுறவு சாா் -பதிவாளா் சமுத்திர விஜயன், மாவட்ட வழங்கல் அலுவலா் மணிமேகலை, பயிற்சியாளா் சண்முகம், நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.