ஆற்காடு நகராட்சியில் காலை உணவு வழங்கும் பள்ளிகளில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
ஆற்காடு நகராட்சியில் உள்ள 6 துவக்கப் பள்ளிகளில் பயிலும் 661 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கிவைத்து, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மாணவா்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிா என்பது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் ஆற்காடு தோப்புகானா நகராட்சி வடக்கு மற்றும் தெற்கு பள்ளியில் நேரில் பாா்வையிட்டாா். அப்போது மாணவா்களுடன் அமா்ந்து சாப்பிட்டு உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தாா்.
நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன், துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், ஆணையா் (பொறுப்பு) கணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் காமாட்சி, தணிகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அதேபோல், ஆற்காடு வட்டம், புதுப்பாடி, கிளாம்பாடி ஊராட்சியில் நூறுநாள் வேலை திட்டப் பணியாளா்களுடன் இணைந்து ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் பனை விதைகளை நீா் நிலைப் பகுதிகளில் நட்டாா்.
இதில், ஊரக வளா்ச்சி, வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.