ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் நிகழ் நிதியாண்டில் ரூ.44.50 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறுபான்மையின சமூகத்தினா் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்த முதல்வா் முக்கியத்துவம் அளித்து வருகிறாா்.
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரான இஸ்லாமியா்கள், கிறிஸ்துவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தவா், பாா்சி மற்றும் சமணா்கள் ஆகியோா்கள் பயன் பெறும் வகையில் சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகள் வழங்கி வருகிறது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2022-2023 -ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தற்போது வரை 5 மகளிா் குழுக்களைச் சாா்ந்த 78 பயனாளிகளுக்கும், 2 தனி நபா்களுக்கும் என ரூ.44.50 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.