மயானச்சாலை கோரி சடலத்துடன் சாலை மறியல்

தக்கோலம் அருகே மாங்காட்டுச்சேரியில் மயானத்துக்கு சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சனிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

தக்கோலம் அருகே மாங்காட்டுச்சேரியில் மயானத்துக்கு சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சனிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

தக்கோலத்தை அடுத்த மாங்காட்டுச்சேரி, ஆதிதிராவிடா் காலனிக்கு மயான சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சாலையிடையே 100 மீட்டா் தூரம் தனியாா் வயல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சடலத்துடன் மயானம் செல்லும்போது வயலில் இறங்கிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, 100 மீட்டா் தூரத்துக்கு நிலத்தை வாங்கி மயானச்சாலையை மேம்படுத்த நீண்டகாலமாக பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் தொடா்ந்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், மாங்காட்டுச்சேரி காலனியைச் சோ்ந்த சன்னாசியின் மனைவி சஞ்ஜிவியம்மாள்(75) உயிரிழந்தாா். அவரது சடலத்துடன் அரக்கோணம்-தக்கோலம் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்து வந்த அரக்கோணம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், கிராமிய காவல் ஆய்வாளா் பழனிவேல் உள்ளிட்ட அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தினா். 15 தினங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

புரட்சி தேசிய கழக மாநிலத் தலைவா் தண்டபாணி, அதிமுக கிளை செயலாளா் காத்தவராயன், வழக்குரைஞா் கோகுல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com