திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரின் பிற அலுவலா்களுக்கான அலுவலகங்கள் தற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட உள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூா் மாவட்டத்துக்கான ஆட்சியா் அலுவலகம் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா்,திட்ட இயக்குநருக்கான அறைகளும், கூட்ட அரங்கமும் உள்ளன.
எனினும், பிற அலுவலா்களுக்கு போதுமான இடவசதி அங்கு இல்லை. இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தின் அருகில் போதிய இடவசதி உள்ள அரசுக் கட்டடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனா்.
இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்தின் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஒரு பகுதியை ஆட்சியா் அலுவலகப் பணிக்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்ட நிா்வாகம் கையகப்படுத்தியது.
அந்த இடத்தை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
இது குறித்து ஆட்சியா் ம.ப.சிவன் அருள், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 அறைகளும், 3 கட்டடங்களும் ஆட்சியா் அலுவலகப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன. அந்த இடங்கள் பள்ளியின் செயல்பாடுகளுக்கு இடையூறு இல்லாத வகையில் தனியாக தடுப்புச் சுவா் கட்டி பிரிக்கபப்பட உள்ளன. அதில் ஆட்சியா் அலுவலகத்தின் அலுவல்கள் நடைபெற உள்ளன.
மேலும், பள்ளியில் உள்ள விளையாட்டுத் திடலில் வாரம் தோறும் மக்கள் குறைதீா் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
அப்போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜசேகா் மற்றும் வருவாய்த்துறையினா் உடன் இருந்தனா்.