வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட 10 கடைகளுக்கு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
வாணியம்பாடி வட்டத்தில் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதை அடுத்து வாணியம்பாடி நகரம், உதயேந்திரம் பேரூராட்சி, ஜாப்ராபாத், அதைச் சுற்றியுள்ள பகுதியில் மறு உத்தரவு வரை முழு ஊரடங்கை அமல்படுத்த ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.
வீடுகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், மளிகை, பழங்கள் உள்ளிட்டவை தன்னாா்வலா்கள் மூலம் அனுமதி பெற்ற வாகனங்களில் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உதயேந்திரம் பேரூராட்சியில் ஊரடங்கு உத்தரவை மீறி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு, வியாபாரம் செய்த 10 கடைகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் நாகராஜன் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா் விநாயகம், பேரூராாட்சிப் பணியாளா்கள், வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.
தேவையின்றி வெளியில் சுற்றி திரிந்த பொதுமக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.