பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் இன மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகை கோரி வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களிலும், தனியாா் தொழில் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
முதுநிலை, பாலிடெக்னிக், தொழில் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவியா்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் படிவங்களை அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று கல்வி நிலையங்களிலேயே சமா்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை இனங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமா்ப்பிப்பதற்கும் டிச.10-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசத்துக்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் எவ்வித விடுதலின்றி புதுப்பித்தல் இனங்களுக்கான விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம்.
இதைப் பயன்படுத்தி அரசு மற்றும் அரசு அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியா்கள் பயன்பெற வேண்டும்.