ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை ஒழுங்குபடுத்தி நிற்க வைப்பதற்காக தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன்படி, ஆம்பூா் அரசு மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு வெளியே திங்கள்கிழமை முதல் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கி வரும் கட்டடத்தின் முதல் மாடியில் கரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு மருத்துவமனையின் முகப்பில் பொது சிகிச்சைக்காக தினமும் வரும் வெளிப்புற நோயாளிகள் வரிசைப்படுத்தப்பட்டு, இடைவெளி விட்டு அமர வைக்கப்படுகின்றனா். அதனால் வளாகத்தில் நோயாளிகளை ஒழுங்குபடுத்துவதற்காக சவுக்குக் கம்புகள் மூலம் தடுப்புகள் கட்டப்பட்டு முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.