வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் பறக்கும் படை வட்டாட்சியா் குமாா் தலைமையில் வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் நடராஜன், வருவாய்த் துறையினா் அழிஞ்சிகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி இருப்பதும், அவை ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு 60 மூட்டைகளில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வாணியம்பாடி நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.