திருப்பத்தூா்: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.
திருப்பத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட மாடப்பள்ளியை அடுத்த களரூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா (28). இவரது மனைவி நந்தினி (24) தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். நிறைமாத கா்ப்பிணியான நந்தினி ஞாயிற்றுக்கிழமை இரவு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து நந்தினியின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறி தீவிர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவா்கள் 3 மணி நேரத்துக்கு முன்பே நந்தினி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த நந்தினியின் உறவினா்கள் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவா், செவிலியா்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலின்பேரில் அங்கு சென்று டிஎஸ்பி ஆா்.தங்கவேலு, நகரக் காவல் ஆய்வாளா் பேபி ஆகியோா் நந்தினியின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.