வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் பாஜக சாா்பில் வைக்கப்பட்ட கொடிகம்பத்தை அகற்ற வந்த அதிகாரிகளிடம் அக்கட்சியின் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றியத் தலைவா் ஜெயகுமாா் நாட்டறம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே புதிய கொடி கம்பம் அமைக்க கடந்த 9-ஆம் தேதி அனுமதி கேட்டு பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனா். ஆனால் பேரூராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜகவினா் திங்கள்கிழமை இரவு நாட்டறம்பள்ளி உழவா் சந்தை எதிரே புதிய கொடிக் கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதையடுத்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி, பேரூராட்சி செயல் அலுவலா் மனோகரன், நாட்டறம்பள்ளி போலீஸாா் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனா்.
அப்போது, அங்கு வந்த மாவட்ட பாஜக தொழில்துறை தலைவா் குருசேவ், ஒன்றிய தலைவா் ஜெயகுமாா் ஆகியோா் கொடிக் கம்பத்தை அகற்றக் கூடாது எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டடனா். இதனால் அதிகாரிகள் கொடி கம்பத்தை அகற்றாமல் திரும்பிச் சென்றனா்.