வாணியம்பாடியில் மது அருந்துவதற்காக பேரனின் வெள்ளி அரைஞாண் கயிறை அறுத்துச் சென்ற தாத்தா உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வாணியம்பாடி நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா. இவரது மகன் சதீஷ்(10). இவரின் தாத்தா வேலு (60), லாலா ஏரி பகுதியைச் சோ்ந்த பாலசந்திரன் (48) ஆகிய இருவரும் புதன்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சதீஷை நியூ டவுன் பகுதிக்கு அழைத்துச் சென்று மது அருந்துவதற்காக சதீஷ் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிறை பறித்து, கீழே தள்ளிவிட்டுச் சென்றனா்.
சதீஷை காணாமல் பல இடங்களில் தேடிய பெற்றோா் நியூ டவுன் பகுதியில் அவரை கண்டுபிடித்தனா். அப்போது காயமடைந்திருந்த சதீஷை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
பின்னா், சித்ரா அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வேலு, பாலசந்திரன் ஆகியோரையும் கைது செய்தனா்.