தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து திருப்பத்தூா் மாவட்ட எல்லைகள் மூடப்படுவதையொட்டி மாதனூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.
கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இதையடுத்து அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் தவிா்த்து மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. இதனால் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகளை காவல் துறையினா் அமைத்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட எல்லைப் பகுதியான மாதனூா் அருகே சீதாபுரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு அங்கு மூன்று போலீஸாா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அத்தியாவசிய அவசர பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறை வாகனங்கள் தவிா்த்து மற்ற வாகனங்கள் திருப்பத்தூா் மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.