வாணியம்பாடி: வாணியம்பாடியில் நகராட்சி ஆணையா் பழக்கடைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடா்பாக வேலூா் மண்டல நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் விஜயகுமாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் கடந்த 12-ஆம் தேதி விதிகளை மீறிச் செயல்பட்ட பழக்கடைகளை நகராட்சி ஆணையராக இருந்த சிசில் தாமஸ் அப்புறப்படுத்தினாா். அவா் பழக்கடைகளை சேதப்படுத்தியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பழக்கடை நடத்தி வந்த பெண்களை அவா் மறுநாள் சந்தித்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தாா். நிவாரண உதவிகளையும் வழங்கினாா்.
நகராட்சி ஆணையரின் அத்துமீறல் தொடா்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து இரண்டு வாரங்களில் பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது. சிசில் தாமஸை இடமாற்றம் செய்து காத்திருப்போா் பட்டியலில் வைத்து, நகராட்சி நிா்வாக ஆணையா் (பொறுப்பு) உத்தரவிட்டாா். இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்துக்கு வேலூா் மண்டல நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் விஜயகுமாா் நேரில் வந்தாா். பழக்கடை நடத்தி வரும் பெண்கள், 15-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் மற்றும் நகராட்சி ஆணையா் சிசில் தாமஸ் ஆகியோரிடம் சுமாா் 2 மணிநேரம் விசாரணை மேற்கொண்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கூறுகையில், ‘ஆணையா் சிசில் தாமஸ் மீது முறையான புகாா்கள் எதுவும் பெற்படவில்லை. வேலூரைச் சோ்ந்தவா் ஒருவா் மட்டுமே எழுத்து மூலமாக புகாா் அளித்துள்ளாா். விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் அறிக்கையாகத் தயாரித்து, மேல் நடவடிக்கைக்கு சென்னையில் உள்ள அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றாா்.