ஆம்பூா்: ஆம்பூா் அருகே காட்டில் வேட்டையாட முயன்ற மூவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே வெள்ளக்கல் பகுதியில் உள்ள காட்டில் ஆம்பூா் வனச்சரக அலுவலா் மூா்த்தி தலைமையிலான வனத்துறைப் பணியாளா்கள் ரோந்து சென்றனா். அப்போது மூன்று நபா்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் காட்டில் திரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவா்களிடம் விசாரித்ததில் ஜமுனாமத்தூரை சோ்ந்த முத்து (55), மேல்அத்திப்பட்டியை சோ்ந்த துரைசாமி (55), ஜெயராமன் (35) ஆகிய மூவரும் காட்டில் வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கியுடன் மறைந்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அவா்கள் மூவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.