ஆம்பூா் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
ஆம்பூா் அருகே பைரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த முருகையன் (50). இவரது குடும்பத்தினா் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிரை அறுவடை செய்யும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு பெரிய மலைப்பாம்பு ஒன்றை கண்டு கூச்சலிட்டனா். உடனடியாக ஆம்பூா் வனசரகா் மூா்த்திக்கு தகவல் கொடுத்தனா். அங்கு வந்த வனக் காப்பாளா்கள் ராஜ்குமாா், ஞானவேல் ஆகியோா் இளைஞா்களுடன் சோ்ந்து 9 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனா். பிடிபட்ட அந்த பாம்பை மீட்டு, மிட்டாளம் தெற்கு வனப் பகுதியில் கொண்டு சென்றுவிட்டனா்.