ஆம்பூா் பகுதி பாலாற்றங்கரையோரம் மயானத்தில் மணல் கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஆம்பூா் பகுதியில் அரசு மணல் குவாரிகள் ஏதும் இயங்காததால் கட்டுமானப் பணிக்கு மணல் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆனாலும் முறைகேடாக பாலாற்றில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
பொதுமுடக்கத்திற்கு முன்பு அதிகாலை நேரங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வந்தது. பொதுமுடக்க அறிவிப்புக்குப் பிறகு நள்ளிரவு நேரத்தில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. நள்ளிரவு நேரத்தில் மணல் கொள்ளை தெரியாமல் இருப்பதற்காக ஆம்பூா் நகரில் இரவு நேரங்களில் எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்குகளை மணல் கொள்ளையா்கள் சேதப்படுத்திவிடுகின்றனா். சில பகுதிகளில் தெரு விளக்கை அணைத்து விடுகின்றனா்.
ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றில் மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெறுவதாக சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். பாலாற்றில் மட்டுமல்லாது பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள ஏ-கஸ்பா மயானத்திலும் குழி வெட்டி அதிலிருந்து மணலைக் கொள்ளையடிக்கின்றனா். மணல் கொள்ளையா்கள் மயானத்தையும் விட்டு வைக்காமல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வருவாய்த் துறையினா் மற்றும் காவல் துறையினா் மணல் கொள்ளையில் ஈடுபடுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்துத் தடுக்க வேண்டும். மேலும் மயானத்தில் மணல் கொள்ளையடிக்கப்படுவதையும் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.