திருந்திய நெல் சாகுபடி அல்லது இயந்திரம் மூலம் நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஜே.சி.ராகினி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கந்திலி, திருப்பத்தூா் வட்டாரங்களில் திருந்திய நெல் அல்லது இயந்திர நடவு சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
மேட்டுப்பாத்தி அமைத்து நெல் நாற்றங்கால் தயாா் செய்ய வேண்டும். 12 அல்லது 14- ஆம் நாள் இளம் நாற்று நடவு செய்ய வேண்டும். நடவு வயல் நன்கு சமன்படுத்தப்பட்ட நடவின் போது லேசான நீா் தேங்கியிருந்தால் போதுமானது.
வரிசைக்கு வரிசை நாற்றுக்கு நாற்று இடைவெளி 22.5-க்கு 22.5 சென்டிமீட்டா் இடைவெளிவிட்டு சதுர நடவு செய்ய வேண்டும். நடப்பட்ட 10-ஆவது நாள் கோனோ களைக் கருவி மூலம் களை எடுக்க வேண்டும். பிறகு 10 நாள்கள் இடைவெளியில் நான்கு முறை கோனோவீடா் மூலம் களை எடுக்க வேண்டும். அவ்வாறு கோனோவீடா் பயன்படுத்தும்போது வோ்களுக்கு காற்றோட்டம் அதிக அளவில் கிடைப்பதால் தூா்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
களைகள் மடக்கி சேற்றில் கலக்கப்படுவதால் மண்ணில் கரிமச் சத்து அளவு கூடுகிறது. நீா் மறைய நீா் பாய்ச்சுவதால் திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்யும்போது நீரின் தேவை குறைக்கிறது. பயிரின் தேவையின் அடிப்படையில் இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி உரமிடுவதால் உரச் செலவு குறைகிறது. இம்முறையில் சாகுபடி செய்வதால் செலவு குறைந்து, அதிக மகசூல் கிடைக்கிறது.
இதன்படி திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல், திருந்திய நெல் சாகுபடி வயலின் புகைப்படம்-2 ஆகிய ஆவணங்களை வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலா், வட்டார வேளாண் அலுவலா் மூலம் வயல் ஆய்வு செய்த பிறகு மானியம் வழங்கப்படும்.