வாணியம்பாடி: செயற்கை மணல் தயாரித்தவா் மீது நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி மேலூா் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்களிலிருந்தும், தனியாருக்கு சொந்தமான நிலங்களிலிருந்தும் அதிகாரிகளின் துணையோடு பொக்லைன் மூலம் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுத்து செயற்கை மணல் தயாரித்து நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூா் எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்.பி விஜயகுமாா் உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி காவல்ஆய்வாளா் அருண்குமாா் தலைமையில் போலீஸாா் கொண்டகிந்தனப்பள்ளி மேலூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது ஹரிஷ் என்பவா் அனுமதியின்றி பல இடங்களில் மண் கடத்தி வந்து அவருக்கு சொந்தமான நிலத்தில் மண்ணை பதுக்கி வைத்து செயற்கை மணல் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் ஹரிஷ் மீது வழக்குப்பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.