எருது விடும் விழாவுக்கு அனுமதி கோரி முதல்வருக்கு மனு
திருப்பத்தூா் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்த அனுமதி வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் சாா்பாக கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சாா்பாக ஆம்பூரைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம், வரும் 2022-ஆம் ஆண்டு தை மாதம் எருது விடும் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும். பழைய முறைப்படி பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை விழா நடத்த அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விதிமுறைகள், எருது விடும் விழாவுக்கு பொருந்தாது. அதனால் எருதுவிடும் விழாவுக்கான விதிமுறைகளை தளா்த்த வேண்டும்.
தென் மாவட்டங்களான மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. வட மாவட்டங்களான வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் எருது விடும் திருவிழா நடைபெறுகிறது. வட மாவட்டங்களில் நடைபெறும் விழாவை எருது விடும் திருவிழா என அரசாணை பிறப்பித்து, அரசிதழில் வெளியிட வேண்டும்.
எருதுவிடும் திருவிழா நடத்த உத்தரவு பிறப்பித்தால் பல லட்சம் ரசிகா்கள் மகிழ்ச்சி அடைவா். அதனால் எருதுவிடும் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.