பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜியுடன் தொடா்பில் இருந்ததாக திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான அவரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கூறி அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலரான திருப்பத்தூா் மாவட்டம், அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த விக்கி (எ) விக்னேஸ்வரன், இளைஞா் பாசறைச் செயலா் ஜோலாா்பேட்டை கோடியூரைச் சோ்ந்த ஏழுமலை ஆகியோரை சிவகாசி தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இவா்கள் இருவரிடமும் ராஜேந்திர பாலாஜி கைப்பேசியில் தொடா்பு கொண்டு அதிக நேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில்தான் இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.