ஏலகிரி மலையில் ஒரே வாரத்தில் தொடர்ந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு உள்ள பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலம் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து இளைஞர்கள் தங்கும் விடுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் ஏலகிரி மலையில் கரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு தங்கும் விடுதிகளில் பணிபுரியும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே உறுதி செய்யப் பட்டு அவர்களுக்கு சிகிச்சையும், தனிமையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு ஊசி போடும் முகாம் கடந்த வாரம் நடைபெற்றது. ஆனால்,தடுப்பூசி போட்டுக்கொள்ள இங்கு உள்ள மலைவாழ் மக்கள் பெரும்பாலானோர் முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நிலாவூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் இருவரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒருவர் என ஒரே வாரத்தில் தொடர்ந்து 5 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இசசம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்கள் கரோனா தொற்று காரணமாக உயிர் இழந்தனரா என்று பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும்,நிலாவூர் பகுதியில் உள்ள பலருக்கும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏலகிரி மலையில் முகாம் அமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.