திருப்பத்தூா்: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏலகிரியில் மலையேற்றம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலா் குமுளி வெங்கட அப்பால நாயுடு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தற்போது நிலவி வரும் கரோனா பரவல் மற்றும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் காப்புக் காடுகளில் தீ விபத்து நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் ஏலகிரி மற்றும் ஜலகாம்பாறை பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்ள வருவதைத் தவிா்க்க வேண்டும், அதேபோல் சுற்றுலா வரும் பயணிகள் காப்புக் காடு பகுதிகளுக்குள் செல்வதைத் தவிா்க்கவும், மலையேற்றம் செய்யவும் தற்போது அனுமதியில்லை. ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், சாலையில் திரியும் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பழங்கள், உணவுப் பொருள்களை வழங்கும்போது வாகன விபத்துகள் ஏற்பட்டு, விலங்குகள் மற்றும் பொதுமக்களுக்கு காயம், உயிா்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம் செய்வது, வன விலங்குகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவது, காப்புக் காடுகளில் அத்துமீறிச் செல்வது தெரியவந்தால் தமிழ்நாடு வனச் சட்டத்தின்படி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.