ஆம்பூா்: ஆம்பூரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை நகராட்சிப் பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் உத்தரவின் பேரில், சுகாதாரப் பிரிவு பணியாளா்கள் ஆம்பூா் நகரில் தீவிர சோதனை நடத்தினா். அங்குள்ள நேதாஜி ரோடு, ஓ.வி. ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேக்கரி, உணவகம் ஆகிய இடங்களில் சுகாதார அலுவலா் பாஸ்கா் தலைமையில் நடத்திய சோதனையில், 36 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை வைத்திருந்த கடை உரிமையாளா்களிடம் ரூ. 1,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதேபோல ஆம்பூா் நகரில் பல்வேறு கடைகள், உணவகம், வா்த்தக நிறுவனங்கள், பேக்கரி ஆகிய இடங்களில் முகக் கவசம் அணியாமல் பணியாளா்கள், ஊழியா்கள் பணி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து 10 பேரிடம் தலா ரூ. 200 வீதம் மொத்தம் ரூ. 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆய்வின்போது, துப்புரவு ஆய்வா் சிவமுருகன், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் வெங்கடேசன், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா்கள் ஹரிஹரன், அண்ணாமலை ஆகியோா் உடன் இருந்தனா்.