திருப்பத்தூரில் இரவு 7 மணிக்கு கடைகள் மூடல்
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் கரோனா பரவலைத் தடுக்க இரவு 7 மணிக்கு அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம், வா்த்தக சங்கம், அனைத்து வணிகா்கள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சிவப்பிரகாசம் தலைமையில் குழுவினா் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை முதல் காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வேண்டும் என தாமாகவே முன்வந்து தெரிவித்தனா்.
மேலும், தொடா்ந்து கரோனா பரவல் அதிகமானால் கடைகள் மூடப்படும் நேரத்தை மேலும் குறைப்பது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.
அதன்படி, திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கடைகளும் இரவு 7 மணிக்கு மூடப்பட்டன.