திருப்பத்தூா் கோட்டைப் பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி சனிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட 9 மற்றும் 10-ஆவது வாா்டு கோட்டை தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், அப்பகுதியில் சுமாா் 4 ஆண்டுகாலமாக சீரான குடிநீா் விநியோகிக்கவில்லை என்கின்றனா். இந்நிலையில், நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்டோா் திருப்பத்தூா் பஜாா் பகுதியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இது குறித்து மறியலில் ஈடுபட்டவா்கள் கூறியது:
சுமாா் நான்கு ஆண்டுகாலமாக குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. திருப்பத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் பலமுறை புகாா் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.
தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தலிங்கம் பொதுமக்களிடம் கூடிய விரைவில் குடிநீா் விநியோகம் செய்ய வழிவகை செய்யப்படும் எனக் கூறியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
மறியல் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.