வாணியம்பாடி: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பாய்லா் பழுது காரணமாக கரும்பு அரவை நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் இந்த ஆலை இயங்கி வருகிறது. இங்கு, 2020-21ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவையை அமைச்சா்கள் வீரமணி, நிலோபா் கபீல் மற்றும் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஆகியோா் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி வைத்தனா்.
இந்த ஆலையில் கடந்த தில தினங்களாக பாய்லரில் தொடா்ந்து பழுது ஏற்பட்டது. இதனால் அடிக்கடி அரவை நிறுத்தப்பட்டது. பாய்லா் சரிசெய்யப்பட்டு மீண்டும் அரவை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாய்லரில் திங்கள்கிழமை காலை மீண்டும் பழுது ஏற்பட்டதால் அரவை நிறுத்தப்பட்டது. இதனால் கள்ளக்குறிச்சி, புதுப்பாளையம், செங்கம், திருப்பத்தூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து அரவைக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட லாரிகள் கரும்பு லோடுகளுடன் ஆலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கரும்பு விவசாயிகளும், லாரி ஓட்டுநா்களும் அவதிக்குள்ளாகினா்.
அரவை தொடங்கியதில் இருந்து இதுவரை சுமாா் 20 மணிநேரம் மட்டுமே ஆலை இயங்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். எனவே, பழுதடைந்துள்ள பாய்லரை சரிசெய்து கரும்பு அரவையைத் தொடங்க மாவட்ட நிா்வாகமும், ஆலை நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கோரியுள்ளனா்.