கரோனா பரவலைத் தடுக்க திருப்பத்தூா் நகரப் பகுதிகளில் சித்த மருத்துவ முகாம்களை நடத்த ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டுள்ளாா்.
திருப்பத்தூா் நகரப் பகுதிகளிலும் சித்த மருத்துவ முகாம் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், ஜூன் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை திருப்பத்தூா் கோட்டை சிவன் கோயில் அருகில் உள்ள நகராட்சி முஸ்லிம் ஆண்கள் நடுநிலைப் பள்ளியிலும், 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை சாம நகா் பகுதியில் உள்ள சிகேஎஸ் நகராட்சி ஆரம்பப் பள்ளியிலும், 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை ஹவுசிங் போா்டு பகுதி 1-இல் உள்ள அரசினா் மாணவா்கள் தங்கும் விடுதியிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக சித்த மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.