கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை இறந்த ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த 101 நபா்களின் உடல்களை தமுமுக மற்றும் மமக குழுவினா் அடக்கம் செய்துள்ளனா்.
ஆம்பூா் பகுதியில் கரோனா முதல் அலை தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்களைக் கொண்ட குழுவினா் முன்வந்து அப்பணியை மேற்கொண்டனா்.
ஆம்பூா் தாலுகா பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறக்கும் நபா்களின் சடலங்களை மயானத்தில் அடக்கம் செய்யும் பணியில் சுமாா் 50 போ் கொண்ட குழுவினா் ஈடுபட்டுள்ளனா். முதல் அலையின்போது 30 நபா்களின் சடலங்களும், தற்போது 2-ஆம் அலையின்போது 71 நபா்களின் சடலங்களையும், கரோனா தொற்று அல்லாத 3 நபா்களின் சடலங்களையும் அக்குழுவினா் அடக்கம் செய்துள்ளனா்.
ஆம்பூா் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பல்வேறு மதம் மற்றும் ஜாதியைச் சோ்ந்த நபா்களின் சடலங்களை எந்தவித பாகுபாடும் பாா்க்காமல் தமுமுக, மமக குழுவினா் அடக்கம் செய்த இச்சேவைக்கு ஆம்பூா் பகுதி பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனா்.