வாணியம்பாடி: சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஊா்க் காவல் படையினா் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் சரகத்திலும் 48 போ் ஊா்க் காவல் படையில் பணியாற்றி வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்டத்தில் 120 போ் பணிபுரிந்து வருகின்றனா். தற்போது கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் போலீஸாருடன் இணைந்து ஊா்க் காவல் படையினா் செயல்பட்டு வருகின்றனா்.
அவா்களது சேவையைப் பாராட்டும் வகையில் முன்களப்பணி யாளா்களாகவும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் குறைந்த அளவிலான மாதந்திர ஊதியத்தை எதிா்ப்பாா்த்துள்ள நிலையில் பெரும்பாலான ஊா் காவல் படையினா் இரவு, பகலும் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பள தொகை வழங்கப்படாமல் நிலுவையாக இருந்து வருகிறது. எனவே, நிலுவையில் உள்ள சம்பள தொகை வழங்க கோரியும், கரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றி வரும் ஊா் காவல் படையினருக்கு ஊக்கத் தொகையும் வழங்க வேண்டும் என்று திருப்பத்தூா் மாவட்ட ஊா்க் காவல் படையினா் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.