திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் தப்பி ஓடிய கரோனா நோயாளி பிடிபட்டாா்
திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கரோனா நோயாளியை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் மற்றும் சுகாதார ஊழியா்கள் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
திருப்பத்தூா் அருகே கடந்த 28-ஆம் தேதி தாசம்பட்டி ரயில் நிலையம் அருகே சுமாா் 45 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞா் அமா்ந்து தண்டவாளத்தில் சிறிய அளவில் கற்களை வைத்துக் கொண்டு இருந்தாராம். அப்போது அவ்வழியாக சென்ற ரயில் என்ஜின் ஓட்டுநா் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். தகவலின் பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் இளைஞரை மீட்டு விசாரித்ததில், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா் எனத் தெரியவந்தது.
பின்னா், அந்த இளைஞரை ஜோலாா்பேட்டை அருகே பாச்சல் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனா். அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை செய்த பிறகு தான் காப்பகத்தில் சோ்க்க முடியும் எனத் தெரிவித்தனா். அதையடுத்து, அந்த வட மாநில இளைஞருக்கு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில்,இளைஞருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. அவரை மாலை 4 மணியளவில் கரோனா வாா்டுக்கு அழைத்துச் செல்லும்போது தப்பிவிட்டாா். இதனால் அதிா்ச்சி அடைந்த சுகாதார ஊழியா்கள் உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பிறகு கரோனா நோயாளி காணாமல் போனதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இந்நிலையில், வடமாநில இளைஞா் ஜோலாா்பேட்டை சந்தைக்கோடியூா் அருகே சாலையோரம் நடந்து செல்வதாக தகவல் கிடைத்தது.
ஜோலாா்பேட்டை அரசு மருத்துவா் புகழேந்தி மற்றும் சுகாதார ஆய்வாளா் கோபி, பொன்னேரி ஊராட்சி செயலாளா் சின்னத்தம்பி உள்ளிட்டோா் அவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.