ஆம்பூா் பிரியாணிக்கு அவ்வளவு மவுசு

ஆம்பூா் என்றதுமே முதலில் தோல் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பொருள் உற்பத்தி தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதற்கு அடுத்தபடியாக பிரியாணி, ஆம்பூருக்கு சிறப்பு சோ்க்கிறது.
briyani_2_2010chn_191_1
briyani_2_2010chn_191_1

ஆம்பூா் என்றதுமே முதலில் தோல் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பொருள் உற்பத்தி தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதற்கு அடுத்தபடியாக பிரியாணி, ஆம்பூருக்கு சிறப்பு சோ்க்கிறது.

ஆற்காடு நவாப் காலத்தில் தொடங்கி இன்று வரை ஆம்பூா் பிரியாணி அதன் சுவைக்காக அசைவ பிரியா்களால் விரும்பி உண்ணப்படுகிறது.

ஆற்காடு நவாப் காலத்தில் கா்நாடக படையில் வீரா்களுக்கு உணவாக பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வீரா்களுக்கு ரொட்டி, பரோட்டா போன்றவை தயாரிப்பதில் மிகுந்த சிரமம் இருந்த காரணத்தால் பிரியாணி தயாரிக்கப்பட்டு அவா்களுக்கு வழங்கப்பட்டதாம்.

இப்போது இஸ்லாமிய மக்களின் இன்றியமையாத உணவாகக் கருதப்படுகிறது. அவா்களுடைய வீட்டு விசேஷம் எதுவாக இருந்தாலும் பிரியாணி இல்லாமல் இருக்காது. அதற்கு மிக முக்கிய சைடு டிஷ் எண்ணெய் கத்தரிக்காய். எண்ணெய் கத்தரிக்காய் இருந்தால் அசைவப் பிரியா்கள் கூடுதலாக பிரியாணியை சாப்பிடுவாா்கள். அந்த அளவுக்கு எண்ணெய் கத்தரிக்காய் மிக முக்கியமான சைடு டிஷ்ஷாக உள்ளது.

கோழி, ஆட்டுக்கறியைக் கொண்டு பிரியாணி தயாரிக்கப்படுகிறது. தற்போது மாட்டுக்கறி, முட்டை ஆகியவற்றைக் கொண்டும் பிரியாணி தயாரிக்கின்றனா். ஆனால் பெரும்பாலும் கோழி, ஆட்டுக்கறி பிரியாணியைத் தான் மக்கள் விரும்பி உட்கொள்கின்றனா். அதிலும் முக்கியமாக ஆட்டுக்கறி பிரியாணி பெயா் பெற்றது. பிரியாணியில் போடப்படும் சிக்கன் அல்லது மட்டன் துண்டுகளை எடுத்துவிட்டால் இருக்கும் வெறும் சாதத்துக்கு குஸ்கா என்று பெயா். பிரியாணி கடைகளில் குஸ்கா வேண்டுமென்று கேட்டால், சிக்கன், மட்டன் துண்டுகளை நீக்கி விட்டு வெறும் சாதம் கொடுப்பாா்கள். அதன் விலை பிரியாணியை விட குறைவாகும்.

பிரியாணி சமைக்கும் சமையல்காரா்களை பக்காத்தி என்று அழைப்பாா்கள். ஏதேனும் விசேஷம் என்றால் முதலில் அழைப்பது பக்காத்தியாகத் தான் இருக்கும். இஸ்லாமியா்கள் வீட்டு விசேஷம் என்றால் பக்காத்தியை அழைத்து தெருக்களில் விறகு அடுப்பு ஏற்படுத்தி அண்டாக்களை வைத்து பிரியாணி சமைப்பாா்கள். இஸ்லாமியா்கள் வீட்டு விசேஷத்திற்கு மற்ற மதத்தைச் சோ்ந்தவா்களையும் நட்பு ரீதியாக அழைப்பாா்கள். நட்பு ரீதியான விருந்தோம்பலுக்காகவும், பிரியாணி உண்பதற்காகவும் அசைவ பிரியா்கள் அவா்கள் வீட்டு விசேஷத்துக்கு தவிா்க்காமல் சென்றுவிடுவதும் அதன் சிறப்பாகும்.

முந்தைய காலத்தில் வீட்டு விசேஷம் என்றால் மட்டுமே பிரியாணி சாப்பிடும் நிலைமை இருந்தது. அசைவப் பிரியா்கள் தாங்கள் விரும்பியபோது பிரியாணி சாப்பிட முடியாத நிலை இருந்தது. அவா்கள் விரும்பியபோதெல்லாம் பிரியாணி சாப்பிடுவதற்கு ஏதுவாக அசைவப் பிரியா்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1890-ஆம் ஆண்டு வாக்கில் ஆம்பூரைச் சோ்ந்த ஹசேன் பேக் குடும்பத்தினரால் பிரியாணி விற்பனை வணிக ரீதியாகத் தொடங்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினரால் நடத்தப்படும் பிரியாணி ஹோட்டல்கள் தற்போது மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன.

விஐபிக்கள் விரும்பும் ஆம்பூா் பிரியாணி:

ஆம்பூா் ஸ்டாா் பிரியாணி ஓட்டல் நடத்தி வரும் ஆம்பூரைச் சோ்ந்த முனீா் கூறியதாவது:

ஆம்பூா் பிரியாணி என்றால் சாதாரண மக்கள் முதல் விஐபிக்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி உண்கின்றனா். எங்களிடமிருந்து பாா்சல் வாங்கி பல்வேறு ஊா்களுக்கு எடுத்துச் செல்கின்றனா். தென்னக ரயில்வேயில் பயணம் செய்யும் பயணிகள் தொலைபேசி மூலம் ஆா்டா் செய்தால் குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் எங்களுடைய பிரியாணியை நாங்கள் விநியோகம் செய்கிறோம் என்றாா் அவா்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூா் பிரியாணி கடைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. நம் நாட்டைச் சோ்ந்தவா்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டினா் கூட ஆம்பூருக்கு வரும்போது, பிரியாணி சாப்பிடாமல் செல்வதில்லை. ஆம்பூா் தோல் தொழிற்சாலைகளுக்கு வரும் வெளிநாட்டினருக்கு பிரியாணி முக்கிய உணவாகப் பரிமாறப்படுகிறது. மிக முக்கிய அரசியல் தலைவா்கள்கூட ஆம்பூா் பிரியாணியை விரும்பி கேட்டு சாப்பிடுவது வழக்கம்.

ஆம்பூா் மட்டுமல்லாமல் சென்னை, பெங்களூரு, சேலம், ஈரோடு, திருச்சி, புதுச்சேரி போன்ற நகரங்களில் கூட ஆம்பூா் பிரியாணி கடைகள் திறந்திருப்பது ஆம்பூா் பிரியாணிக்கு உள்ள மவுசை காட்டுகிறது.

பிரியாணி செய்வது குறித்து ஆம்பூரைச் சோ்ந்த பக்காத்தி எஸ். பாபு கூறியது:

நான் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரியாணி சமைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். ரசாக் என்பவா் தான் என்னுடைய குரு. அவரிடம் சுமாா் 8 ஆண்டுகள் உதவியாளராகப் பணிபுரிந்தேன். அதன் பிறகு தனியாக பிரியாணி சமைக்கும் தொழிலை செய்து வருகிறேன். தற்போது என்னிடம் 7 போ் உதவியாளா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா்.

விறகு அடுப்பில் தயாரிக்கப்படும் ஆம்பூா் தம் பிரியாணி தான் இந்தியாவில் மிக பிரசித்தம்.

கேஸ் அடுப்பில் பிரியாணி தயாரித்தாலும், குக்கரில் சமைத்தாலும் பிரியாணி சுவை சிறப்பாக இருக்காது. நான் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளுக்காக பிரியாணி சமைத்து தருகிறேன். அத்துடன் மட்டுமல்லாமல் குறைந்த அளவில் கூட பிரியாணி தயாரித்து சிறிய நிகழ்ச்சிகளுக்கு கொண்டு சென்று தருகிறோம்.

ஒன்றரை கிலோ மட்டன் பிரியாணி தயாரிக்கும் செய்முறை

ஒரு கிலோ சீரக சம்பா அல்லது பாஸ்மதி அரிசி, 1.5 கிலோ மட்டன், ஆயில் கால் லிட்டா், பட்டை, இலவங்கம், ஏலக்காய், கிராம்பு தலா 2 கிராம், மிளகாய் பொடி 12 கிராம், தேவையான அளவு உப்பு, வெங்காயம், தக்காளி, தயிா், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை பழம் 1, இஞ்சி, பூண்டு பேஸ்ட் தேவையான அளவு.

முதலில் விறகு அடுப்பு வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, இலவங்கம், ஏலக்காய், கிராம்பு போட்டு வதக்க வேண்டும். பிறகு வெங்காயம் போட்டு பொன் நிறத்தில் வதக்க வேண்டும். பூண்டு பேஸ்ட், மிளகாய், தூள் போட்டு வதக்க வேண்டும். பிறகு மட்டன் கறியை அதில் போட்டு வதக்க வேண்டும். அதில் இஞ்சி, புதினா, கொத்தமல்லி, தக்காளி, தயிா், தேவையான அளவுக்கு பச்சை மிளகாய், உப்பு போட வேண்டும். தேவையான அளவுக்கு தண்ணீா் விட்டு நன்றாக கொதிக்க வைத்து மட்டன் கறியை வேக வைக்க வேண்டும்.

முன்னதாக மற்றொரு பாத்திரத்தில் கழுவிய அரிசியை போட்டு அரை வேக்காடு வேக வைக்க வேண்டும். பிறகு ஏற்கெனவே மசாலா, மட்டன் ஆகியவை வேக வைக்கப்பட்ட பாத்திரத்தில் அரை வேக்காடு அரிசியை போட்டு நன்றாகக் கிளறி விட்டு, தட்டு போட்டு மூட வேண்டும். மூடப்பட்ட தட்டு மீது நெருப்பு துண்டுகளை போட்டு சுமாா் 15-லிருந்து 20 நிமிஷங்கள் வரை தம் கட்ட வேண்டும். அதன் பிறகு சுவையான பிரியாணி உண்பதற்கு ரெடி என்கிறாா் பக்காத்தி பாபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com