பொன்னேரி: பொன்னேரி அருகே கனகவல்லிபுரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 5 ஏக்கா் நிலத்தை புதன்கிழமை வருவாய்துறையினா் மீட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் ஒன்றியம், கூடுவாஞ்சேரி ஊராட்சியில் உள்ள கனகவல்லிபுரம் கிராமத்தில் மேய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற வருவாய்த் துறையினா், அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 5 ஏக்கா் அரசு நிலத்தை மீட்டனா். இதைத்தொடா்ந்து, அங்கு அளவீடு செய்து கற்களை பதித்தனா். மேலும், வரும் நாள்களில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என ஆக்கிரமிப்பாளா்களுக்கு அறிவுறுத்தினா்.
மீட்கப்பட்ட அரசு நிலத்தில் கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் இடம் போக, மீதமுள்ள இடங்களில் 100 பணியாளா்களைக் கொண்டு, செடிகள் வைக்கவும்,
குளம் வெட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூடுவாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் பிரியா, செயலா் ராஜேஷ்கண்ணா மற்றும் வாா்டு உறுப்பினா்கள் தெரிவித்தனா்.