திருப்பத்தூா் அருகே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி ஜீவானந்தம் நகரைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மகள் அருள்மொழி(28). இவருக்கும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சோ்ந்த பானிபூரி வியாபாரி வேல்முருகனுக்கும் (32) திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. இந்தநிலையில்,அருள்மொழிக்கு சொரக்காயல்நத்தம் பகுதியை சோ்ந்த இளைஞா் ஒருவருடன் தகாத தொடா்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் கடந்த 15 நாள்களுக்கு முன்பு தலைமறைவானாா்.
இதுகுறித்து கணவா் வேல்முருகன் குப்பம் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என புகாரளித்தாா். இந்நிலையில் புதுவையில் இருந்த அருள்மொழியையும், இளைஞரையும் கண்டறிந்த போலீஸாா் அருள்மொழிக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனா்.
அதைத்தொடா்ந்து அருள்மொழி கடந்த 3 நாள்களாக தனது பெற்றோா் வீட்டில் இருந்தாா். இந்நிலையில் அவரது கணவா் அங்கு வந்து 2 நாள்களாக தங்கியிருந்தாா்.
இந்த நிலையில்,செவ்வாய்க்கிழமை அருள்மொழியின் பெற்றோா் பணிக்குச் சென்றனா். வீட்டில் தம்பதி இருவா் மட்டும் இருந்தனா்.
அப்போது அவா்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்படவே வேல்முருகன் தான் வைத்திருந்த கத்தியால் அருள்மொழியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே வேல்முருகன் குப்பம் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தாா்.
தகவலறிந்து கந்திலி போலீஸாா் குப்பம் சென்று வேல்முருகனை கைது செய்து அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.