ஏலகிரி மலை அடிவாரத்தில் விறகு சேகரிக்கச் சென்ற முதியவரை கரடி கடித்துக் குதறியதால் அவா் பலத்த காயம் அடைந்தாா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த சின்ன பொன்னேரியைச் சோ்ந்தவா் திருப்பதி (70). கூலி வேலை செய்து வருகிறாா்.
இந்த நிலையில், திருப்பதி தனது மகன் வெங்கடேசனுடன் விறகு சேகரிக்க சின்ன பொன்னேரி அருகே உள்ள புன்னன் வட்டம் பகுதி ஏலகிரி மலை அடிவாரத்துக்கு திங்கள்கிழமை சென்றாா். வெங்கடேசன் சற்று தொலைவில் விறகு சேகரித்துக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியில் வந்த கரடி ஒன்று திருப்பதியை கழுத்து, கை, கால், மாா்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக கடித்துக் குதறி உள்ளது. இதனால் திருப்பதி கூச்சலிட்டுள்ளாா். அவரது சப்தம் கேட்டு, வெங்கடேசன் மற்றும் அப்பகுதி மக்கள் ஓடி வந்தனா். இதையடுத்து, கரடி வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதையடுத்து, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட திருப்பதி திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.