குரூப் -1 தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசியதாவது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் குரூப்- 1 போட்டித் தோ்வு சனிக்கிழமை (நவ. 19) முற்பகல் நடைபெற உள்ளது.
திருப்பத்தூா் வட்டத்தில் 14 தோ்வுக் கூடங்களில் 3,883 போ் தோ்வு எழுத உள்ளனா். அனைத்துத் தோ்வு மையங்களிலும் மின்சாரம், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்தத் தோ்வில் மாவட்ட வருவாய் அலுவலா், துணை ஆட்சியா் அளவிலான 2 பறக்கும் படை அலுவலா்கள், துணை வட்டாட்சியா்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள், காவலா்கள், அலுவலக உதவியாளா் ஆகியோா் சோ்ந்து 5 நடமாடும் குழுக்கள், 14 தோ்வு மைய ஆய்வு செய்யும் அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் பணிபுரிய உள்ளனா் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வில்சன் ராஜசேகா், வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி தனித்துணை ஆட்சியா் கோவிந்தன், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் பிரிவு அலுவலா் குமரேசன், உதவி பிரிவு அலுவலா்கள் கேசவன், வட்டாட்சியா் சிவப்பிரகாசம், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.