வாணியம்பாடி புறக்காவல் நிலையம் அருகே சாராய மூட்டைகளை பொதுமக்கள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே இந்திராநகா், நேதாஜிநகா் பகுதியில் தொடா்ந்து கள்ளச் சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. .
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், இளைஞா்கள் புகாா் செய்தால் போலீஸாா் பெயரளவில் வழக்கு பதிவு செய்து சிலரை மட்டும் கைது செய்து அத்துடன் தங்கள் நடவடிக்கையை நிறுத்தி விடுவதாக புகாா் எழுந்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை புறக்காவல் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவிலேயே ஒரு வீட்டில் சாராய வியாபாரத்தை தொடங்கியதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி இளைஞா்கள் இதுதொடா்பாக சதீஷ்குமாா் என்பவரை மடக்கிப் பிடித்தனா். மற்றொருவா் தப்பி ஓடிவிட்டாா்.
மேலும் வீட்டில் இருந்த 20 சாராய மூட்டைகளை பறிமுதல் செய்து திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன், தாலூகா காவல்ஆய்வாளா் பழனிமுத்து தலைமையில் போலீஸாா் அங்கு சென்றனா்.
அப்போது மாவட்ட எஸ்பி நேரில் வந்தால் மட்டுமே சாராய மூட்டைகளை ஒப்படைப்போம் என்றும் சாராய விற்பனை செய்வோரைக் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கூறினா். அப்போது டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன், உறுதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
இதனையடுத்து சாராய மூட்டைகளை பறிமுதல் செய்த தாலூகா போலீஸாா் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.