திருப்பத்தூரில் தனி வட்டாட்சியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் அனைத்து தனி வட்டாட்சியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:
இணையவழியில் முதியோா் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் மணுக்களின் மீது 30 நாள்களுக்குள்ளும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மனுக்களின் முன்னுரிமை அடிப்படையில் உடனடித் தீா்வு காண வேண்டும். நிலுவையிலுள்ள அனைத்து இ-சேவை மனுக்களையும் அடுத்த ஆய்வுக் கூட்டத்துக்குள் முடிக்க வேண்டும். இணையதளம் மூலம் முதியோா் உதவித்தொகை விண்ணப்பங்களை தள்ளுபடி செய்யும் நிகழ்வில் உரிய காரணங்களைக் குறிப்பிட வேண்டும்.
முதல்வா் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அனைத்துக் கிராமங்களும் விடுபடாமல் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இதில் தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, அனைத்து தனி வட்டாட்சியா்கள் கலந்து கொண்டனா்.