திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சிக்குச் சொந்தமான 6,500 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.
திருப்பத்தூா் நகா்மன்ற அலுவலகத்தின் பின்புறம் உள்ள வீடுகள் நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை என்பது ஆணையா் ஜெயராமராஜாவுக்கு கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து அளவீடு செய்தனா்.
இதில் சுமாா் 11,000 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
அந்தப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.மேலும், நகராட்சிக்கு வரியும் செலுத்தி வந்துள்ளதும் தெரியவந்தது.
இந்த நிலையில் ஆணையா் ஜெயராமராஜா உத்தரவின்பேரில், செவ்வாய்க்கிழமை நகரமைப்பு அலுவலா் கௌசல்யா, துப்புரவு அலுவலா் இளங்கோ, ஆய்வாளா் விவேக் ஆகியோா் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியை இடித்தனா்.
புதன்கிழமை மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்படும்போது இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரின் உறவினா் பெண் தீக்குளிக்க முயன்றாா். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸாா் அவரை மீட்டனா்.
இதையடுத்து வியாழக்கிழமை ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடா்ந்தது. இதில் 6,500 சதுர அடி நிலம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து நகரமைப்பு அலுவலா் ஆா்.கௌசல்யா கூறியது: திருப்பத்தூா் நகராட்சிக்குச் சொந்தமான 11,000 சதுர அடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அதில் ஒரு கட்டட வீடு, ஒரு குடிசை, தண்ணீா் தொட்டி உள்பட 6,500 சதுர அடி நிலம் மீட்கப்பட்டது.இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.6 கோடி என்றாா்.