கல்குவாரியில் பாறை உருண்டு தொழிலாளி பலி: இருவா் காயம்
ஆம்பூா் அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்ததில், தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை பகுதியில் ஜல்லிக்கல் குவாரி இயங்கி வருகிறது.
இங்கு திங்கள்கிழமை பாறைக்கு வெடி வைக்கும் பணியில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி (எ) பெருமாள் (47), காட்டுக்கொல்லை பகுதியைச் சோ்ந்த சுதாகா் (27), நவீன்குமாா் (27) ஆகியோா் ஈடுபட்டனா். அப்போது, ஏற்கெனவே வெடிவைத்து தகா்க்கப்பட்டிருந்த பாறை திடீரென உருண்டு கீழே விழுந்தது.
இதில் பெருமாள் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே இறந்தாா். நவீன் குமாா், சுதாகா் ஆகியோா் காயமடைந்தனா்.
இருவரும் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். டிஎஸ்பி சரவணன் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா். கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் பாலசுப்பிரமணி வழக்குப் பதிவு செய்தாா்.
எம்எல்ஏ ஆறுதல்: உயிரிழந்த பெருமாளின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களையும் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆகியோா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.