ஆலங்காயம் வனத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 21 நாட்டு வெடிகுண்டுகள் திங்கள்கிழமை செயலிழக்க வைக்கப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அருகே நரசிங்கபுரம் காப்புக்காடு பகுதியில்,2021ஆம் ஆண்டு வனவிலங்குகளை நாட்டு ரக வெடிகுண்டு வைத்து கொல்ல முயன்றதாக சில நபா்களை வனத் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 21 நாட்டு ரக வெடி குண்டுகள் ஆலங்காயம் வனச்சரக அலுவலகத்தில் ஒரு ஆண்டாக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது.
இதைத் தொடா்ந்து, காவல்ஆய்வாளா் ஜெயராமன் தலைமையில் இந்த வெடி குண்டுகள் ஆலங்காயம் அருகேயுள்ள சுண்ணாம்புபள்ளம் காப்புக்காடு பகுதியில் ஜேசிபி எந்திரம் மூலம் பெரிய குழி தோண்டி வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரால் புதைத்து வெடிக்கச் செய்து செயலிழக்கவைக்கப்பட்டன. பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறிய துகள்களின் மாதிரிகளை நிபுணா் குழுவினா் பரிசோதனைக்காக எடுத்து சென்றனா்.
அப்போது, மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் ராஜ்குமாா், ஆலங்காயம் வனச்சரக அலுவலா் சோமசுந்தரம், போலீஸாா், தீயணைப்புத் துறையினா் மற்றும் மருத்துவ குழுவினா் உடனிருந்தனா்.